சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 18) நடைபெற்ற கூட்டத்தில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, ஆதி திராவிடர் நலத்துறையின் முக்கிய அறிவிப்புகளை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டார். அவைகள்,
- தூய்மைப் பணியாளர் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள வீடற்ற 500 உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு திட்டத்தின் வீடுகள், தூய்மைப் பணியாளர் நல வாரியம் மானியத்துடன் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் சிறந்த தமிழ் படைப்புகள், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும்.
- மாணாக்கர் விடுதிகளில், மாணவர்களின் சமூக திறன்களை வளர்த்துக் கொள்ளவும், ஆர்வங்களைக் கண்டறிந்து அதன் வாயிலாக தன்னம்பிக்கையை வளர்க்கவும், இசை மற்றும் கவின் மன்றங்கள், வாசித்தல் மன்றங்கள், புகைப்படக் கலை மன்றங்கள், சுற்றுச்சூழல் மன்றங்கள், சதுரங்க விவாதம், நாடகம், இசை, தகவல் தொழில்நுட்பம் போன்ற புத்துணர்வுக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் மன்றங்கள் உருவாக்கப்படும்.
- வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கான கல்வி உதவித்திட்டம் இரண்டு திட்டக் கூறுகளாக திருப்தி அமைக்கப்படும். திட்டமொன்றில் 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக ஆண்டு வருமானம் உச்ச வரம்பு உள்ள மாணாக்கருக்கு, படிப்பின் அடிப்படையில் ஆண்டிற்கு 36 லட்சம் ரூபாய்க்கு மிகாமலும், திட்டம் இரண்டில் 8 லட்சம் ரூபாய்க்கு மேல் 12 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் உச்ச வரம்புள்ள மாணாக்கருக்கு, 24 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
- நகர்ப்புற பகுதிகளில் பணிபுரியும் மகளிர் தங்குமிடத் தேவைகளை பூர்த்தி செய்யவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழ்நாடு பணி புரியும் மகளிருக்கான விடுதி நிறுவனத்துடன் இணைந்து, துறையின் விடுதிகள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
- 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணாக்கருக்கு, உயர் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்விற்கான பயிற்சிகள், சிறந்த பயிற்சி நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும்.
- விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கான திறன் மேம்பாடு, சுயதொழில் தொடங்குவதற்கான குறுகிய நீண்ட காலப் பயிற்சி, தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு திட்டம், உலகளாவிய திறன் பயிற்சிகள் ஆகியவை தாட்கோ மூலம் வழங்கப்படும்.
- மகளிரின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், முன்னேற்றத்திற்கான அடிப்படை வருவாய் ஈட்டும் தொழில்களை மேற்கொள்ளவும், தற்போது தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வரும் 2.50 லட்சம் ரூபாய் மானியத் தொகை 6 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிரின் வாழ்க்கை தரம் மேன்மை அடையும் வகையில், மகளிர் உறுப்பினர்களாகக் கொண்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் புதிதாக உருவாக்கப்படும். ஏற்கனவே இயங்கி வரும் மகளிர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நவீனப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 5,000 மகளிர் பயனடையும் வகையில், 1.25 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படும்.
- தாட்கோ மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளையோரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட உதவிடும் பொருட்டு, தற்காலத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்படும்.