தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி இரண்டு ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையின் மூலம் அளிக்கப்பட்டுவருகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் நீட்,ஜே.இ.இ., சி.ஏ. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு அரசால் தனித்துவம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும்எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்தெரிவித்தார்.
2019-20ஆம் கல்வியாண்டில் நீட், ஜே.இ.இ., போட்டித் தேர்வுகளுக்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
ஏற்கனவே 412 மையங்களில் பயிற்சி அளித்துவரும் நிலையில், மேலும் இந்த ஆண்டு கூடுதலாக 94 பயிற்சி மையங்களில் நீட் போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
மேலும் இதர வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் 50 விழுக்காடு மதிப்பெண்கள் கொண்டும், 12ஆம் வகுப்பில் 50 மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 20 மாணவர்களும் தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஜே.இ.இ. போட்டித் தேர்வு ஆங்கில வழியில் மட்டும் நடைபெறுவதால், இதற்கு ஆங்கில வழி பயிற்சி மையங்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மேலும், இது நேரடி பயிற்சி வகுப்புகளாகவும் நடத்தப்படும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாட ஆசிரியர்கள் பயிற்சி மையங்களில் மாணவர்களுக்கு கற்பிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.