சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், “மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நீட் தேர்வில் வெற்றிபெற உரிய பயிற்சி எடுத்துக்கொண்டதால் தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் மாதிரி தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 668 மதிப்பெண்கள் பெற்றேன்.
கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று திருப்திகரமான முறையில் தேர்வு எழுதியுள்ளேன். தேர்வு முடிந்த பின்பு வெளியிடப்பட்ட பதில்களை சரிபார்த்ததில் 720 மதிப்பெண்களுக்கு 637 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன், நீட் தேர்வில் 90 கேள்விகளில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளிக்கவில்லை.
ஆனால், நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 720 மதிப்பெண்களுக்கு 252 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது அதிர்ச்சி அளித்தது. தேர்வு முடிவுக்குப் பின்பு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள ஓஎம்ஆர் விடைத்தாளில் 11 கேள்விகளுக்கு பதில் அளிக்காதது போல் உள்ளது.
இணையத்தில் விடைத்தாள்கள் வெளியிட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். மேலும் தன்னுடைய அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வழக்குத் தொடர்ந்துள்ள மாணவியின் அசல் விடைத்தாளைச் சமர்ப்பிப்பது குறித்து தேசிய தேர்வு முகமை, சிபிஎஸ்இ நவம்பர் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.