தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2021, 11:28 AM IST

ETV Bharat / state

மாங்குரோவ் காடுகள் மீது அக்கறைத் தேவை - ராமதாஸ்

கடலோரப் பகுதிகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

need action to increase mangrove forests PMK Founder Ramadas
need action to increase mangrove forests PMK Founder Ramadas

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடல் சீற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இயற்கை நமக்கு அளித்த கொடையான அலையாத்திக் காடுகளின் (மாங்குரோவ் காடுகள்) பரப்பளவு கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடலோரப் பகுதிகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் வனத் துறை சார்பில் செயற்கைக்கோள் மூலம் தமிழ்நாடு வனப்பகுதிகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் மாங்குரோவ் எனப்படும் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு 4 சதுர கிமீ அளவுக்கு குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில்தான் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் அலையாத்திக் காடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அழிந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

முத்துப்பேட்டை கடற்பகுதியில் மட்டும் 11,886 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் இருந்தன. ஆனால், இப்போது அவற்றில் 60 விழுக்காடு காடுகள் அழிந்துவிட்டன. இன்றைய நிலையில் சுமார் 4800 ஹெக்டேர் பரப்பளவிலான அலையாத்திக் காடுகள் மட்டுமே உள்ளன. அவற்றிலும்கூட 2000 ஹெக்டேர் (16.8%) காடுகள் மட்டுமே அடர்த்தியாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2018ஆம் ஆண்டில் காவிரிப் பாசன மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலால்தான் அலையாத்திக் காடுகளின் பரப்பளவு குறைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. முத்துப்பேட்டை பகுதியை ஒட்டிய 22-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களுக்கு இவைதான் பாதுகாப்பாக உள்ளன. இந்தக் காடுகள் சீரமைக்கப்படாவிட்டால் இப்பகுதிகள் கடல் சீற்றத்திற்கு ஆளாகக் கூடும்.

சிதம்பரம் பகுதியில் உள்ள பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் அடர்த்தியாலும், போதிய பராமரிப்பின்மையாலும், சிலரின் சுயநலத்தாலும் குறைந்துவருகின்றன. சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரிப் பகுதியிலும் அதிக அளவில் இக்காடுகள் உள்ளன.

ஆனால், இவற்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்ற எண்ணத்தில் அலையாத்திக் காடுகளைப் பொறுப்பற்ற மனிதர்கள் அழித்துவருகின்றனர். இயற்கைச் சீற்றங்களும், இயற்கையை மதிக்காத மனிதர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு மேற்கொள்ளும் தாக்குதல்களால் அலையாத்திக் காடுகள் அழிந்துவருகின்றன. இது மிகவும் ஆபத்தானது ஆகும்.

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் கடல் சீற்றத்தை தடுப்பது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும் திகழ்கிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பறவைகள் பிச்சாவரம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகளுக்கு ஆண்டுதோறும் வருகைதருகின்றன.

எனவே, அலையாத்திக் காடுகளை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். திட்டமிட்டுச் செயல்பட்டால் தமிழ்நாட்டில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அதிகரிக்கச் செய்வது சாத்தியமான ஒன்றுதான்.

கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் அலையாத்திக் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க சிறப்புத் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும். அலையாத்திக் காடுகளை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்துவது மட்டுமின்றி, அவற்றை ஒருங்கிணைத்து இயற்கைச் சுற்றுலா வளையமாக அறிவிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details