தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 31, 2022, 4:38 PM IST

ETV Bharat / state

Namma Ooru Thiruvizha: மாட்டிறைச்சி குறித்த சர்ச்சைக்கு அவசியமில்லை: கனிமொழி எம்பி

மாட்டு இறைச்சி என்பது தனிப்பட்ட உரிமை என்றும், இதனை சர்ச்சை ஆக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

நம்ம ஊரு திருவிழா 2023: மாட்டிறைச்சி குறித்து சர்ச்சைக்கு அவசியமில்லை.. கனிமொழி எம்பி!
நம்ம ஊரு திருவிழா 2023: மாட்டிறைச்சி குறித்து சர்ச்சைக்கு அவசியமில்லை.. கனிமொழி எம்பி!

அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கனிமொழி எம்பி செய்தியாளர் சந்திப்பு

சென்னை: வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளாகத்தில், இன்று (டிச.31) தமிழ்நாடு அரசின் கலைபாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து வழங்கும் ‘நம்ம ஊரு திருவிழா -2023’ தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஓட்டி, தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலை விழா சென்னையிலும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரிலும், வருகிற ஜனவரி 13 அன்று மாலை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.

மேலும் ஜனவரி 14, 15, 16 மற்றும் 17 ஆகிய 4 நாட்கள் சென்னையில் தீவுத்திடல், பெருநகர மாநகராட்சி விளையாட்டு திடல், நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா உள்ளிட்ட 16 இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் மண்டல தலைமை இடங்கள் அமைந்துள்ள கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலை வடிவங்களான தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பம்பை ஆட்டம், தெருக்கூத்து, கட்டைக்கூத்து, கணியன் கூத்து, பொம்மலாட்டம் தோற்பாவை கூத்து, சேர்வை ஆட்டம், தெம்மாங்கு பாட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலை வடிவங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் பரதநாட்டியம், வாய்ப்பாட்டு, மெல்லிசை நிகழ்ச்சிகள் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், பஞ்சாப், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா போன்ற பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இந்த கலை நிகழ்ச்சிகளில் சுமார் 700 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்” என்றார்.

இதனையடுத்து பேசிய கனிமொழி எம்பி, “கலை நிகழ்ச்சிகளோடு உணவு திருவிழாவும் நடத்தப்படும். இந்த உணவு திருவிழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய உணவுகள், சென்னைக்கு அதிகம் பழக்கம் இல்லாத உணவுகள் இடம்பெறும். திரைப்பட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் நடத்தப்பட உள்ளது.

மேலும் நம்ம ஊரு திருவிழாவை இலவசமாக காணலாம். மறைந்த முதலமைச்சர் கருணாநிதி இல்லாத உணர்வு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும், அண்ணன் முதலமைச்சர் ஸ்டாலின் அதே ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும்.

நம்ம ஊரு திருவிழா அரசு நிகழ்ச்சியாக நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மண் சார்ந்த கலைகள் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் விதமாக இது அமையும்” என்றார். தொடர்ந்து மாட்டு இறைச்சி குறித்து கேட்ட கேள்விக்கு, ‘உணவு என்பது தனிப்பட்ட உரிமை. இதனை சர்ச்சை ஆக்க வேண்டிய அவசியம் இல்லை’ என பதிலளித்தார்.

இதையும் படிங்க:2022 ஆண்டுக் கண்ணோட்டம் - ஓராண்டில் தமிழக அரசு செய்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details