இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021, நமக்கு அளப்பரிய நம்பிக்கைகளை வழங்கிய தேர்தலாக நடந்து முடிந்திருக்கிறது. கடுமையான உங்களது உழைப்பு மாபெரும் வெற்றிகளுக்கு அடித்தளமாக மாறி இருக்கிறது.
வியர்வை வடிந்த உங்களது முகங்கள் வெற்றிகளுக்கான புத்தொளி வீசுகிற ஒரு விடியலின் அடையாளங்களாய் மாறி இருக்கின்றன. பெரிய பொருளாதார வசதிகள், குடும்பப் பின்புலம் இன்றி, சாதி மத உணர்வை சாகடித்து, தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் விடியலுக்காக, நம் இனத்தின் அரசியல் அங்கீகாரத்திற்காகக் கடும் உழைப்பை சிந்தி நீங்கள் பாடுபட்டது ஒருபோதும் வீண்போகாது.
அதிகாரமும் பொருளாதாரமும் உடைய 50 ஆண்டுகாலக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு எதிராக எளியவர்கள் நாம் பெறுகிற ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றவை. அப்பழுக்கற்ற உங்கள் வியர்வையினால் விளைந்தவை. நம் மொழி காக்க; நம் இனம் காக்க; நம் மண் காக்க; நம் மானம் காக்க; இன்னுயிர் தந்த மாவீரர்களின் மூச்சுக்காற்று நம்மை ஒவ்வொரு நொடியும் வழி நடத்தியது.
நம் உயிர் தலைவர், என் உயிர் அண்ணன் பிரபாகரனின் ஆன்ம பலம் நமக்கு வழிகாட்டியாக நின்றது. கடுமையாக உழைத்து, கம்பீரமாக இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உங்கள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் வரும் கருத்துத் திணிப்புகளை நாம் ஒருபோதும் பொருட்படுத்த தேவையில்லை. இதுபோன்ற கருத்துத் திணிப்புகள் சனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் உளவியலை சிதைப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்படுபவை. கடந்த காலத்தில் கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் வெளியான எவையும் சரியானவையாக இருந்ததில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு.
எனவே இது போன்ற எதிர்மறைச் செய்திகளை, புறக்கணித்துவிட்டு நம்பிக்கைகளோடு வாக்கு எண்ணிக்கை நிகழ்விற்கு நாம் தயாராவோம். நாளை மறுநாள் (02.05.2021 ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு குறித்த நேரத்திற்குச் சென்று, நோய்த் தொற்றுக் கால விதிகளைக் கடைபிடித்து வாக்கு எண்ணிக்கை நிகழ்வினை இராணுவ ஒழுங்கோடு நமது உறவுகள் நிகழ்த்திட வேண்டுமென இந்தச் சமயத்தில் வலியுறுத்துகிறேன்.
நம்பிக்கையான பல செய்திகள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும் மாற்றம் ஒன்றுக்கு தமிழகம் தயாராகிவிட்டது. பெண்கள், புதிய வாக்காளர்கள், மாற்று அரசியலின்பாற் நம்பிக்கை கொண்டவர்கள், படித்த இளைஞர்கள், என சமூகத்தின் பரவலான மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்கின்ற நம்பிக்கைச் செய்திகள் தொடர்ச்சியாக நமக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. முன் எப்போது காட்டிலும் மாபெரும் வெற்றிகளை இந்தத் தேர்தலில் நாம் அடைவோம் என்பது உறுதி.
நமது கடும் உழைப்பு எந்த அளவிற்கு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்பதனைக் கண்டிட, முதல் வாக்கு எண்ணும் நொடியில் இருந்து இறுதி வாக்கு எண்ணும் நொடி வரை இருந்திட வேண்டும் என உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
கடுமையான நோய்த்தொற்று காலமான இக்காலகட்டத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்றி, முழுமையாக மூக்கு-வாய் பகுதிகளை மறைக்கின்ற முகக் கவசங்கள் அணிந்து, கிருமி போக்கிகளைப் பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கை மையங்களில் நாம் தமிழர் உறவுகள் மிகுந்த கவனத்தோடு செயல்படும்படி கோருகிறேன். நம்பிக்கையோடு நில்லுங்கள்.நாம் தமிழர் என கம்பீரமாகச் சொல்லுங்கள்.புதியதோர் தேசம் செய்வோம்!மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்.உறுதியாக நாம் வெல்வோம்!நாளை நாம் பெறும் வெற்றியால் அதை உலகிற்குச் சொல்வோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:ஞாயிறு ரயில் பயணிகள் முன்பதிவு மையங்கள் இயங்காது - தென்னக ரயில்வே