தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 29, 2020, 9:08 AM IST

ETV Bharat / state

விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் நடந்தது என்ன? முத்தரசன் கேள்வி

விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் நடந்தது என்ன என்பது குறித்து பிரதமரும் முதலமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

நேற்று (ஏப்ரல் 28ஆம் தேதி), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ள அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், “விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதலில் நடந்தது என்ன என்பது குறித்து பிரதமரும் முதலமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும். கரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனைக்காக ரேபிட் கருவிகள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதை டெல்லி உயர் நீதிமன்ற விசாரணை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், ஐந்து லட்சம் விரைவு பரிசோதனைக் கருவிகள் வாங்க சீனாவைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு கொடுத்த ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு ஒரு ரூபாய் கூட நஷ்டம் ஏற்படவில்லை என்று அவசர அவசரமாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

இத்துடன் ‘கதை’ முடிந்தது, அடுத்த வேலையைப் பார்ப்போம் என பொது நியாயம் கூறி, ஊழல் பெருச்சாளிகளை தப்பிக்க விட்டு விடலாமா? மத்திய அரசும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் விரைவு பரிசோதனைக் கருவிகள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடந்திருப்பதை மிகத் தந்திரமாக மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபடலாமா? இது தொடர்பான தகவல்கள் தமிழ்நாடு அரசுக்கு தெரியுமா, தெரியாதா?

பொது சுகாதாரத்துறையில் ஏற்பட்ட இயற்கை பேரிடர், சமூகப் பேரழிவை ஏற்படுத்தும் அசாதாரண காலத்தில் பணத்தின் பின்னே அலைந்து சுயநலக் கும்பலை சமூகத்திற்கு அடையாளம் காட்டத் தயங்குவது ஏன்? இதுபோன்ற நேரங்களில் பிரதமர் எப்போதும் வாய் திறந்து பேசுவதில்லையே ஏன்?

விரைவு பரிசோதனைக் கருவிகள் வந்ததும் முதலில் சேலம் மாவட்டத்தில் தான் பயன்படுத்த வேண்டும் என ஆர்வம் காட்டினார் முதலமைச்சர். ஆனால் அந்தக் கருவிகளின் தரம் பற்றியும், அதன் கொள்முதலில் நடந்துள்ள ஊழல் குறித்தும் அவர் அறியவில்லை என்பதை மக்கள் நம்ப வேண்டும்.

நாடு முழுவதும் முடங்கி, பெருந்தொற்று பரவலைத் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையினர் போதிய தடுப்பு சாதனங்கள் இல்லாது போராடிக் கொண்டும், கோடிக்கணக்கானோர் பட்டினிக்கு தள்ளப்பட்டு, உயிர் வாழ உணவுக்கு கையேந்தி நிற்கும் நிலையிலும் கரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதா, இல்லையா?

விரைவு பரிசோதனைக் கருவிகள் தரம் இல்லாததால் அதன் கொள்முதல் உத்தரவு ரத்து செய்யப்பட்டதா? இல்லை டெல்லி உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது போல், அதீத விலை வைத்து ஊழல் நடந்ததால் ரத்து செய்யப்பட்டதா? என்பது குறித்து நாட்டின் பிரதமரும், மாநில முதலமைச்சரும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:'அரசு ஊழியர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது' - ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details