செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ள கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலுக்கு சொந்தமாக சுமார் 60 ஆயிரம் கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த சொத்துக்களை அபகரிக்க 20க்கும் மேற்பட்ட குழுக்கள் காத்திருப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்தி கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை வருவாய் துறை அலுவலர்கள் அளவீடு செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும் வருவாய்த்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதேபோல கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பதிவேட்டை தாக்கல் செய்ய கோயிலின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும், கோயிலின் சொத்துகளை வேறு யாருக்கும் பெயர் மாற்றம் செய்யக்கூடாது என பதிவுத்துறை தலைவர் மற்றும் திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தான் கோயிலின் சொத்துக்களை மறுஉத்தரவு வரும் வரை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என திருப்போரூர் சார் பதிவாளருக்கு உத்தரவிட்டனர். மேலும், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை, செப்டம்பர் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.