தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பலமுறைப் பயன்படுத்தும் செயற்கைக்கோள் குறித்து ஆய்வு நடைபெறுகிறது' - மயில்சாமி அண்ணாதுரை - Multiple use satellite

சென்னை: பலமுறைப் பயன்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட் வடிவமைக்கும் ஆய்வுப் பணி நடைபெற்று வருவதாக முன்னாள் இஸ்ரோ அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

mayilsamy annadurai

By

Published : Nov 12, 2019, 8:22 PM IST

சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை மற்றும் இந்திய ஒலி, ஒளிபரப்பு மன்றம் இணைந்து பொது ஒலிபரப்பு சேவை நாள் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பக் கழகத்தின் துணைத்தலைவரும், அறிவியலாளருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தனி மனிதனுக்கு செய்தி கொண்டு செல்வதில் ஊடகங்களும் வானொலியும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் பள்ளிகளில் பாடம் கற்றுக்கொள்வது போல, ஊடகங்கள் மூலம் கல்விப் பயிலும் வகையில் அவை இருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில் சந்திராயன்-1 மற்றும் மங்கள்யான் குறித்து ஏற்கெனவே சேர்த்து உள்ளோம். இந்தப் பாடங்களை நடத்துவதற்கும் செயற்கைக்கோள் குறித்து எளிதில் மாணவர்களுக்குப் புரியும் வகையில் பாடம் நடத்துவதற்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பள்ளியில் பயிலும் மாணவர்கள் அறிவியல் மையங்களுக்குச் சென்று, செயற்கைக் கோள்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்குப் பதிலாக லேப்டாப் மூலம் செயற்கைக்கோள்களின் செயல்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள்களை பலமுறைப் பயன்படுத்தும் வகையில், தொழில்நுட்ப வடிவமைப்புகளை அமைப்பதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. வரும் காலங்களில் அவை சாத்தியமாகும்.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் மூலம் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த அறிவியல் கண்காட்சியில் சமூகத்திற்குப் பயன்படும் வகையில் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது போன்ற 16 திட்டங்கள் உள்ளன. இந்தியாவில் செயற்கைக்கோள் வடிவமைப்பில் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பலமுறை பயன்படுத்தும் செயற்கைக்கோள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது - மயில்சாமி அண்ணாதுரை

மேலும் செயற்கைக்கோள் மூலம் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு மாணவர்களைச் சிந்திக்கத்தூண்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'நடிகர் சிவாஜி நிலைமை தான் ரஜினி, கமலுக்கும்' - முதலமைச்சர் கருத்து!

ABOUT THE AUTHOR

...view details