தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பெஞ்சமின் காலணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு அரசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்களை தூத்துக்குடி எம்.பி கனிமொழி வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீர் பாதிப்பு கணக்கு எடுக்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவு பெறும். பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளது.
மேலும் நெல், தென்னை, வாழை எனப் பல்வேறு விவசாயங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் உடைந்துள்ளது. இப்படி நிறையப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிந்து சில இடங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ளது என்றாலும், பல்வேறு இடங்களில் மழைநீர் வடியாமல் இருந்து வருகிறது. அந்தப்பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சில பிரதாண சாலைகளில் மழைநீர் வடிந்து வருகிறது.
ஆத்தூர் போன்ற இடங்கள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதால் தான் மின்சாரம் வழங்க இயலவில்லை. அதனைச் சரிசெய்த பிறகு மின்சாரம் வழங்கப்படும். தற்போது வரை, மழைநீர் வடியாத இடங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து இடைவேளையின்றி நடைபெற்று வருகிறது.
முதலில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வெள்ளத்திலிருந்து வெளியேற்றுவது பெரும் சவாலாக அமைந்தது. பின்னர், நிவாரண முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றொரு சவாலாக அமைந்தது. இதனைத் தவிர்த்து மக்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக பல்வேறு நிவாரணங்கள், உதவித்தொகைகளை மாநில அரசு அறிவித்துள்ளது.