தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 10:42 PM IST

ETV Bharat / state

மின்துறை சார்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு!

Monsoon prevention: வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலி மூலம் நடத்தினார்.

minister meeting
மின்சாரத்துறை அமைச்சர் ஆலோசனைக்கூட்டம்

சென்னை:நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்து விரிவான ஆய்வினை காணொலி மூலம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு ஆய்வுக் கூட்டத்தில், மின் பகிர்மான வட்டங்களில் 30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனடியாக சரி செய்வத்ற்கு அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், மின்னகம் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மின்சார சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்படுமாறு அறிவுறுத்தினார். பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து, பாதுகாப்பான முறையில் மின்கட்டமைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபடுமாறும், மின்சார சீரமைப்புப் பணிகளுக்கு தேவையான ஜேசிபி வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ள உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து வாரிய வாகனங்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறும், தேவைப்பட்டால் அருகில் உள்ள மின்பகிர்மான வட்டங்களிலிருந்து பணியாட்களை பணிகளில் ஈடுபடுத்துமாறும், இத்தகைய பருவ மழைக்காலங்களின்போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

மேலும், அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் தமது அலுவலகங்களில் இதற்கென தனியாகக் குழு அமைத்து கனமழையின்போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சேதாரங்கள் குறித்தும் ஆய்வு செய்து உடனடியாக அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களைப் பொறுத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் தயார் நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டார்.

குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனுக்குடன் கள ஆய்வு செய்து மின் விநியோகத்தை உடனடியாக சீர் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பருவமழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில், மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:மணிப்பூரில் மீண்டும் நிகழ்ந்த வன்முறையில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details