தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆட்சி அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் பரவியிருப்பதை இந்த 'தேர்வாணைய மோசடி' பறைசாற்றுகிறது. மேலும் கீழுமாய் புரையோடியிருக்கும் ஊழலுக்கு நடுவிலே, நெஞ்சுரத்தோடு நேர்மையைக் கடைப்பிடிக்கும் மிகச்சிலருக்கு... நம்பிக்கையை விடாதீர்கள். நாளை நமதே" என்று பதிவிட்டுள்ளார்.