சென்னை: இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது. பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான்.
இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டிற்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன. ஒரு சில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக் குறைந்த அளவிலான மாசு ஏற்படும். மேலும் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.