சென்னை:சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 'உலக முதலீட்டாளர்கள்' மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும் (Global Investors Conference 2024 in Chennai), தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், மே 23ஆம் தேதி சிங்கப்பூர் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு மே 25ஆம் தேதி இரவு ஜப்பான் நாட்டின் (MK Stalin Visit Japan) ஒசாகா மாகாணம் வந்தடைந்தார்.
ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் கூடிய சந்திப்பு நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து, ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி அவர்கள் (Osaka Province Vice Governor Mr. Nobuhiko Yamaguchi) ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான 'ஒசாகா கோட்டை'-யின் (Osaka Castle in Japan) சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 27) ஜப்பான் நாட்டின், ஒசாகாவில் உள்ள 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.
ஒசாகா கோட்டை அசுச்சி-மோமோயாமா காலத்தின் 16ஆம் நூற்றாண்டில் ஜப்பானை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இக்கோட்டை சுமார் 61,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. ஜப்பானிய அரசால் இக்கோட்டை முக்கியமான கலாசார சொத்தாக போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கோட்டையானது அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் போன்ற இயற்கை சூழலுடன் அமைந்துள்ளது. செம்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையையும், தமிழர் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு, பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாட்டு சான்றுகளை உலகம் அறிந்து கொள்ளும் வகையில், அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.