தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவளித்த ஜே.பி. நட்டாவுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்! - jp natta

இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் உறுதியாக இருக்கிறது என்றும், சமூகநீதியில் தாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்த ஜே.பி. நட்டாவுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

JP Nadda
JP Nadda

By

Published : Jun 13, 2020, 11:08 PM IST

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதிமுகவும் மனுதாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்ற கருத்தைத் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறும் அறிவுறுத்தியது.

இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் ஓபிசி இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்துள்ளனர். ”இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜகவும் உறுதியாக இருக்கிறது. சமூகநீதியில் நாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது” என்று ஜே.பி. நட்டாவும், இடஒதுக்கீட்டுக் கொள்கைக்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்று ராம் விலாஸ் பாஸ்வானும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”இட ஒதுக்கீடு வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் கருத்துக்களை உச்ச நீதிமன்றத்தில் எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடமின்றி தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் அமைதி காத்து விட்டு, இப்போது 'சமூகநீதிக் கொள்கை மீதான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரிக்க முடியாது' என்று பாஜக தேசியத் தலைவர் கூறியிருப்பது, சற்று வேறுபாடாகவும் வியப்பாகவும் இருக்கிறது.

இருப்பினும், நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும், எங்கே பாஜகவின் சிந்தனைப் போக்கையும் செயல்பாட்டையும் உணர்ந்துகொண்டு எதிர்வினை ஆற்றிடத் தொடங்கி விடுவார்களோ என்ற ஆதங்கத்தின் விளைவாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான இந்தக் கருத்தை காலதாமதமாகவாவது, பாஜக தலைவர் நட்டா இப்போது தெரிவித்திருப்பதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, நட்டா அவர்கள் குறிப்பிட்டுள்ளவாறு, 'பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரும், பாஜகவும் உறுதியாக இருப்பது' உண்மையெனில், நடந்துமுடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை ரத்துசெய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்ட ரீதியான சமூகநீதியை நிலைநாட்டிட மாநிலங்கள் மத்தியத் தொகுப்பிற்கு அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் மற்றும் இளநிலைப் படிப்பிற்கான இடங்களில் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை உடனடியாகச் செயல்படுத்திட பிரதமர் நரேந்திர மோடியை பாஜக தேசியத் தலைவர் நட்டா வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்; மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் அதற்கு உரிய அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details