தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 20, 2020, 3:05 AM IST

ETV Bharat / state

2021 தேர்தல்: தமிழர்களை, தமிழர்களின் கல்வி - வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர் - முக ஸ்டாலின்

“எதிர்வரும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; தமிழர்களை, தமிழர்களின் கல்வி - வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர்!” - முக ஸ்டாலின்

MK stalin speech on 2021 election
MK stalin speech on 2021 election

சென்னை: நேற்று (19-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர், தமிழகக் கோட்டையை எவ்வளவு சீக்கிரம் கைப்பற்றுகிறோமோ அவ்வளவு உரிமைகளைப் பாதுகாக்க முடியும். புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பறிபோய்விட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. குடியுரிமைச் சட்டத்தால் சிறுபான்மையினர் உரிமை சீக்கிரம் பறிபோகப் போகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தைத் திருட முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் மத்திய அரசுப் பணிகள் அனைத்திலும் வெளிமாநிலத்தவரைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். இந்தப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்களது விண்ணப்பங்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்படுகின்றன.

தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு உரிமையை எந்த வகையிலாவது தடுத்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்விக் கூடங்களுக்குள் நுழைய விடாமல் தடுப்பதற்கான எல்லாத் தந்திரங்களையும் செய்கிறார்கள். இவை அனைத்தையும் தடுத்தாக வேண்டிய கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோள்களில் தான் சுமத்தப்பட்டு இருக்கிறது.

இந்த உரிமைகளை போராடியும் வாதாடியும் பெற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. சட்டமன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் - எங்கும் எதிலும் தமிழர் உரிமைகளை, தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். நடக்க இருக்கிற தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்துக்காக தேர்தல் மட்டுமல்ல, தமிழர்களைக் காக்கும் பெரும் போர். தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளைக் காக்கும் பெரும் போர். அந்தப் போரில் வெல்வோம் என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details