தமிழ்நாடு

tamil nadu

‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை வஞ்சிக்கும் அதிமுக அரசு’ - ஸ்டாலின் குற்றச்சாட்டு

By

Published : Dec 31, 2020, 10:09 AM IST

Updated : Dec 31, 2020, 10:21 AM IST

சென்னை: போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பிய பிறகு துறை நடவடிக்கை எடுப்பது வஞ்சகம் இல்லையா? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

MK Stalin condemned TN Govt on teacher termination issues
MK Stalin condemned TN Govt on teacher termination issues

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்துவிட்டு, மீண்டும் வெகு நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே கொண்டுவர வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வைத்துப் போராடிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினைச் சேர்ந்த ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை இதுவரை ரத்து செய்யாமல் இருக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்குத் திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் பலனில்லாததால் - கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தொடங்கினார்கள். அப்போது - பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, அரசு ஊழியர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தரம் தாழ்ந்த காரியத்தை மட்டுமே அதிமுக ஆட்சி செய்தது.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி, உள்ளே நஞ்சை வைத்து வெளியே நயமாக, வேண்டுகோள்விடுத்தார். ஆனால் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டு கரோனா காலத்திலும் மக்களுக்காக அயராது பணியாற்றிவரும் 5068 ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீழ் குற்றக் குறிப்பாணைகள் வழங்கி பேரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.

“போராட்டத்தைத் திரும்பப் பெறுங்கள்” என்று ஒரு முதலமைச்சரே வேண்டுகோள்விடுத்து - அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, அவர்கள் மீதே ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. இது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருப்பதால், அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கவில்லை; பணி ஓய்வும் கிடைக்கவில்லை.

ஆசிரியர்களையும் - அரசு ஊழியர்களையும், அடுக்கடுக்காகத் தொடர்ந்து இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி, முதலமைச்சர் பழனிசாமி எதைச் சாதிக்கப் போகிறார்? அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நம்பி, போராட்டத்தை விலக்கிக் கொண்ட அரசு ஊழியர்களை முதுகில் குத்தி இப்படி துரோகம் இழைத்துக் கொடுமைப்படுத்துவது மன்னிக்க முடியாத மாபாதகம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு 2ஆம் தேதி கலந்தாய்வு!

Last Updated : Dec 31, 2020, 10:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details