திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பிரசவத்திற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த (மே26) ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் இரண்டாம் தளத்தில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து மளமளவென எரிந்தது.
இந்த விபத்தில் செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், அங்கிருந்த குழந்தைகளை மாற்று அறைக்கு அவசர அவசரமாக மாற்றி அவர்களின் உயிரை காப்பாற்றினர். இதனால், குழந்தைகள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் இருந்து சுமார் 36 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன.