தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசின் 'இன்னுயிர் காப்போம் திட்டம்' குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (நவம்பர்18) நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் அதிக அளவு சாலை விபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஸ்டாலின் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளின் இறப்பு விகிதம் (Fatality Rate) 23.9 என்றிருப்பது குறைக்கப்பட்டு, விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் உருவாக்கல்
அதன்படி பல் துறை வல்லுநர்களை உள்ளடக்கிய சாலைப் பாதுகாப்பு ஆணையம் (Road Safety Authority) என்னும் ஒருங்கிணைந்த அமைப்பானது சாலைப் பாதுகாப்புத் திட்டம், வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிர்வாக, நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படவுள்ளது.
சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைபாடுகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகத் தீர்வு காணவும், சாலைப் பொறியியல் தொடர்பான இடைவெளிகளைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக அணுகி, புதிய தொழில் நுட்பத்தோடு அதனைச் சரிசெய்து, தொலைநோக்குத் திட்டத்துடன் விபத்துகளைத் தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும்.
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கவனிப்பை அரசே மேற்கொள்ளும் வகையில், 'நம்மை காக்கும் 48 - அனைவருக்கும் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான இலவச மருத்துவ உதவித் திட்டம்' செயல்படுத்தப்படும்.
நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்பு
சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் இதற்கெனக் கண்டறியப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவருக்கும் இந்தத் திட்டத்தின்கீழ் மருத்துவம் செய்யப்படும். உறுதியளிப்பு அடிப்படையில் செலவினங்கள் கணக்கீடுசெய்யப்பட்டு முதல்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன. சேத குறைப்பு அடிப்படையில் (Damaged Control) உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வகைசெய்யப்பட்டுள்ளது.