தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தவறான கருத்து கூறுவதைத் தொழிலாக வைத்துள்ளார்கள்' - ஆவின் குற்றச்சாட்டு - ஆவின் நிறுவனம் பால் கொள்முதல்

சென்னை: அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட ஆவின் பால் பொருள்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்து வருவதாக பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி மீது ஆவின் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Misconception about Aavin Dairy Agents Association leader Ponnusamyaccuses
Misconception about Aavin Dairy Agents Association leader Ponnusamyaccuses

By

Published : Jul 14, 2020, 7:23 PM IST

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆவின் நிறுவனத்தின் சார்பில் கடந்த ஏழாம் தேதியன்று நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்லேட், மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாள்கள் கெட்டுப்போகாத பதப்படுத்தப்பட்ட பால் (பிளக்சி பேக்குகளில்), டீ மேட் என்ற புதிய வகை பால் என்ற ஐந்து வகையான புதிய பால் பொருள்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துவைத்தார்.

இந்த ஐந்து புதிய பொருள்களும் நீண்ட நாள் கெட்டுப்போகாத அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்ட பால் பொருள்கள். இந்தப் பால் பொருள்களைக் குளிர்சாதன பெட்டியைத் தவிர்த்து அறை வெப்ப நிலையில் 90 நாள்கள்வரை கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில், பிளக்சி பேக்குகளில் ஆவின் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த உண்மைகளைக் கருத்தில்கொள்ளாமல் பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி ஆவின் நிர்வாகத்திற்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பத்திரிகை மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதனை ஆவின் நிர்வாகம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் டீ மேட் பால் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டினை அவர் கூறியள்ளார். பால் வணிக நோக்குடன் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் அதிகம் பயனடையும் வண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் போல விற்பனை கமிஷன் ரூ.5 தரப்படுகிறது. இது தனியார் நிறுவனங்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பொருள்கள் அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதேபோன்று புதிய பொருள்களை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளன.

தனியார் பாலைவிட சிறந்த முறையில் அதிக கொழுப்பு சத்து (6.5%) கொண்ட இந்தப் பால் டீ கடைகள், உணவகங்களில் அதிக கோப்பைகளில் விற்பனை செய்யும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உண்மைகளை பொன்னுசாமி திரித்துக் கூறியுள்ளார்.

இக்கட்டான கோவிட்-19 சூழலில், தனியார் துறையினர் விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதலைத் தவிர்த்த நிலையில், தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் மூலம் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதோடு தமிழ்நாடு முழுவதும் பால் விற்பனை செய்துவருகிறது.

இதைப் பொறுக்கமுடியாத பொன்னுசாமி போன்றோர் பால் முகவர்கள் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் தினமும் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு, சுயவிளம்பரத்திற்காக, கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற நுகர்வோர்களுக்கு லாப நோக்கமின்றி செயல்பட்டுவரும் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான ஆவின் செயல்பாடுகளைக் குறை கூறுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு மக்களுக்காக ஆவின் இக்கட்டான காலகட்டத்திலும் அரசின் சீரிய வழிகாட்டுதல் மூலம் சிறப்பாகப் பணிசெய்துவருகிறது” என குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details