நாடு முழுவதும் கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் தமிழ்நாட்டில், இதுவரை ஆறாயிரத்து ஏழு பேர் உயிரிழந்தும், இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 787 பேர் பாதித்தும் உள்ளனர்.
இதில் பல முதல்நிலைக் களப்பணியாளர்கள் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அப்படி கரோனா பாதித்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் உயிரிழந்தார்.
அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ என 30-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி, மகளுக்கு கரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் மூவரும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். அதில், “கரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது மனைவி, மகள் ஆகியோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'ராயபுரம் மண்டலம் மக்களுக்காக...!' - ஜெயக்குமாரின் நம்பிக்கையூட்டும் மடல்!