சென்னை:சென்னை ஐஐடியின் ஆராய்ச்சி பூங்கா இந்தியா எனர்ஜி ஸ்டோரேஜ் அலையன்ஸ் உடன் இணைந்து 'என்விஷன்' என்ற தலைப்பில், இந்தியாவின் முதல் எரிசக்தி திருவிழாவை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியின்போது அமைச்சர் பேசியதாவது, “கடலுக்குள் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனை தமிழ்நாடு அரசும் வரவேற்கிறது. ஆனால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்போது தென் தமிழ்நாட்டில் பவளப்பாறைகள் பாதிக்காமல் இருக்க மாற்று வழியைக் கண்டறிவதோடு, மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும்.
இயற்க்கை பேரிடர்களைச் சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம், அதற்கு தீர்வாக நீடித்த ஆற்றல் முறைகளுக்கு மாற வேண்டியது காலத்தின் அவசியம். அதனை பின்பற்றிதான் தமிழ்நாடு அரசு பங்களிப்போடு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருந்து காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவின் தலைவர் அசோக் ஜுன்ஜுன்வாலா, "சென்னையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி ஏற்பட்ட புயல் மற்றும் தென் தமிழ்நாட்டில் டிசம்பர் 17ஆம் தேதி ஏற்பட்ட புயல் பூமி அழிவை நோக்கி செல்வதையே சுட்டிக் காட்டுகிறது. தனிமனித அடிப்படையில், கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (GHG Emissions) குறைவாக இருந்தாலும், ஓட்டுமொத்த நாட்டின் கணக்கீட்டில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வளரும் பொருளாதாரத்தில், இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கும்.
இதனை நாம் குறைத்தாக வேண்டும். பருவநிலை மாற்றம் நிகழ்வினால் இந்தியா போன்ற நாடுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே பாதிக்கப்படுகின்றனர். புதைபடிவமற்ற ஆற்றலை (Fossil Free Energy) நோக்கி, நாம் அவசரமாக நகர வேண்டும். அதற்கு சிறந்த வழி பசுமை ஆற்றலை (Green Energy) பொருளாதார ரீதியில் அடைக்கக்கூடிய அளவிற்கு மாற்றுவதுதான். இது ஏற்கனவே நடந்துகொண்டு இருக்கிறது, ஆனால் இன்னும் தேவைப்படுகின்றது.