சென்னை: தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை திட்டப் பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ் வளர்ச்சித் துறையை சிறப்பான துறையாக மாற்ற வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் எண்ணம். மேலும், மாவட்டங்களில் உள்ள அலுவலர்களின் நடைமுறைகளிலேயே தமிழ் ஆட்சி மொழியைக் கொண்டு வர உறுதிபடுத்த வேண்டும்.
மொழிபெயர்ப்பில் அரசுக் கோப்புகள்
அரசின் கோப்புகள் தமிழ் மொழிபெயர்ப்பில் வர வேண்டும் என தலைமைச் செயலாளர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ் அறிஞர்களின் சிலைகளை முழுமையாக பாதுகாக்க ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கலைஞர் பெயரில் செம்மொழி தமிழ் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதன் மூலம் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால், 10 ஆண்டுகளாக அந்த விருதுகள் வழங்கப்படாமல் உள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழு, ஆய்வு மேற்கொண்டு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உயர் ஆய்வு மையத்தை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் கட்டடத்தை திறக்கவிருக்கும் முதலமைச்சர்
தமிழ்மொழியின் சிறப்பை வரும் தலைமுறையும் தெரிந்துகொள்ளும் வகையில், இந்தத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம் ஆகும். இது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்வார்.
செம்மொழி தமிழாய்வு மையம் கொண்டு வந்த பெருமை கலைஞருக்குத் தான் உள்ளது. தன்னாட்சி பெற்ற நிறுவனமாகத் தொடர்ந்து, தமிழாய்வு மையம் நீடிக்கும். பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் தனிக் கட்டடத்தை, விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
மறைமலை அடிகளார் மகன் ஏழ்மையில் இருப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார்" என்றார்.
இதையும் படிங்க:கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை