சென்னை: தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு அமைச்சர் தா.மோ. அன்பரன் தலைமையில் நேற்று (மே.17) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ்குமார், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் ஆகியோர் திட்டங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தா.மோ. அன்பரசன் கூறும் போதும், "செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு குடியமர்த்த படாமல் உள்ளனர். அவர்களை குடியமர்த்துவதற்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. 3 மாதத்திற்குள் அவர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஏரி ஆக்கிரமிப்பாளர் வீடுகளை ஒதுக்குவதில் உள்ள சில சிக்கல்களும் விரைவில் சரிசெய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ஆண்டுக்கு ரூ 3 லட்சம் வருமானம் உள்ள ஏழை, எளியோருக்கு வீடுகள் ஒதுக்கப்படும். சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதில் 480 பேருக்கு மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட தைலாபுரம் குடிசை மாற்று வாரியத்தில் வீடுகள் ஒதுக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "நம் குடியிருப்பு நம் பொறுப்பு" என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்