சென்னை: ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பங்கேற்றனர். இதில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை.
இதனால் ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் இடையூறை ஏற்படுத்தும் என்பதால், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஆலோசித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் ஜனவரி 5ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்போது தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறையுடன் ஆலோசித்துத் தான் முடிவு செய்ய முடியும் என்பதால் நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நாளில் எட்டி விட முடியாது. பேசி முடிவு எடுக்கப்படும் எனப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறைச் செயலர் உடன் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சவுந்தரராஜன், "6 அம்ச கோரிக்கைகளில் எதையும் இப்போது ஏற்க இயலாது. பொங்கலுக்குப் பின்னர் பேசிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இருக்கின்ற எந்த ஒரு பொதுத்துறை தொழிலாளிக்கும் இழைக்கப்படாத அநீதியைப் போக்குவரத்து தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து இழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
பஞ்சப்படி எங்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி. எங்களுக்கு உயர்வாகக் கொடுங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. எங்களிடம் நீங்கள் பட்டிருக்கும் கடன், எட்டு ஆண்டுகளாக வழங்காமல் இருக்கின்ற கடன். பணிக்கு ஆட்கள் எடுப்பது, புதிய பேருந்துகள் இயக்குவது ஆகியவை தமிழ்நாடு சம்பந்தப்பட்டது. மற்ற கோரிக்கைகளையாவது பின்னர் பார்க்கலாம்.