சென்னை: தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 5ஆயிரத்து 329 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளில், 500 சில்லறை மது விற்பனைக் கடைகள் மூடப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மூடுவதற்கு தகுதியான 500 சில்லறை மதுபானக் கடைகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாக துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
வருவாய் குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள், போதிய இடைவெளியில் இல்லாமல் அருகருகே உள்ள டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டப் பல்வேறு காரணிகள் அடிப்படையில் சில்லறை மதுக்கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(மே.26) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படை துணை ஆட்சியர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், டாஸ்மாக் கடைகள் முன்பாக விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்கள் விற்கப்படும் இடங்களைக் கண்டறிந்து காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் 500 சில்லறை மதுபானக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிக் கல்லூரி வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.