சென்னை: இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் இன்று (நவ.25) ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை, குறிப்பாக சமூகத்தில் எளிதாக பாதிக்கப்படும் மக்களுக்கு உறுதி செய்யும் விதத்தில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா பேரிடர் நிவாரணம்
அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. திமுக அரசு பதவியேற்ற உடன் தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 9 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை ரூ.978 கோடி செலவிலும், தலா 4000 ரூபாய் ரொக்கத்தையும் கரோனா பேரிடர் நிவாரணமாக வழங்கியது.
வருகின்ற தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு 2022 ஜனவரி மாதத்தில் 21 உணவுப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1161 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளது.
கலைஞர் உணவகம் அமைக்க கோரிக்கை
650 சமூக உணவகங்களை அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக அரசு நடத்தி வருகிறது. தரமான உணவை மானிய விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் இதன் மூலம் வழங்கி வருகிறது. இந்த உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம்) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.
2021 ஜுன் 1 ஆம் தேதி முதல் 2021 நவம்பர் 18 ஆம் தேதி வரை 15 கோடிக்கும் மேலானோர் இந்த உணவகங்கள் வழியாக பயன்பட்டுள்ளனர். 30,490 கட்டுமான தொழிலாளர்கள் (வெளி மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் சேர்த்து) இதே காலகட்டத்தில் பயனடைந்துள்ளனர்.