தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 11, 2023, 6:57 AM IST

ETV Bharat / state

டெட்ரா பாக்கெட்டில் மது, டாஸ்மாக் நேர மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

டெட்ரா பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றுவது தொடர்பாக மதுப்பிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Minister
டெட்ரா

டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை, டாஸ்மாக் நேர மாற்றம்? - அமைச்சர் முத்துசாமி விளக்கம்!

சென்னை:தலைமை செயலகத்தில் இன்று(ஜூலை 10) டாஸ்மாக் நிர்வாகம் தொடர்பாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, "டாஸ்மாக் பணியாளர்கள் பிரச்சனை குறித்து விவாதித்தோம். டாஸ்மாக் ஊழியர்கள் பிரச்சினை குறித்து 18 தொழிற்சங்கங்களுடன் பேசி, அவர்கள் கொடுத்த மனுக்களை வைத்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பாக நடத்தப்பட வேண்டும். டாஸ்மாக் கடை பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டாஸ்மாக் பணியாளர்கள் வங்கிக்கு செல்லாமல், வங்கி நேரடியாக பணம் பெற்றுக் கொள்ள முடியுமா? என ஆய்வு செய்கின்றோம்.

பார் உரிமம் இருப்பவர்கள்தான் பார் நடத்த முடியும். உரிமம் இல்லாமல் பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். வருமானத்தை ஈட்டுவது எங்களது பெரிய நோக்கமல்ல. இலக்கு நிர்ணயிப்பது, வருவாய் குறையும்போது எந்ததெந்த காரணங்களுக்காக குறைகிறது என்பதை கண்டறியத்தான். குடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் தவறான இடத்திற்கு சென்றால், அதனையும் கண்காணிக்க வேண்டும்.

மதுபாட்டில்கள் சாலைகளில் போடுவதால் நிறைய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளது போல், மது பானங்களை டெட்ரா பாக்கெட்டில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். டாஸ்மாக் கடைகளில் 180 மில்லி லிட்டர் மது வாங்குவோர் மற்றொருவருக்காக காத்திருக்க நேரிடுகிறது. ஆய்வுகள்படி, இதுபோல சுமார் 40 சதவீதம் பேர் 30 நிமிடங்கள் வரை காத்திருக்கின்றனர். எனவே, மது பிரியர்கள் வசதிக்காக 90 மில்லி லிட்டர் டெட்ரா பாக்கெட் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது.

சிலர் காலையில் 7 மணிக்கே டாஸ்மாக் கடைகளை திறக்க கோரிக்கை வைக்கின்றனர். நேரம் மாற்றி அமைப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. எனவே, இது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். மதுபானத்திற்கு பில் தருவது தொடர்பான ஆலோசிக்கப்பட்டுள்ளது. கள் உடலுக்கு நல்லது, அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், பிற மாநிலங்களில் கள் விற்பனையில் பல தவறுகள் நடக்கின்றன. அதனால், அந்த பிரச்சினைகள் இங்கே வரக்கூடாது என்பதற்காக கள் கடைகள் கொண்டுவரப்படவில்லை. இந்த கோரிக்கை தொடர்பாகவும் ஆய்வு செய்கிறோம்.

இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகள் குறைந்தபட்சம் 500 சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின் பார்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை மீறி செயல்பட கூடிய பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் விவகாரம்:விதிமீறல் கடைகளை மூட மக்கள் சார்பில் மேல் முறையீடு செய்ய முடியும் - உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details