தமிழ்நாடு

tamil nadu

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக் கட்டணம் குறைப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : Feb 25, 2022, 6:53 PM IST

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோர் தமிழ்நாடு மருத்துவமனைகளில் ' உள்ளுறைப் பயிற்சி ' மேற்கொள்ளக் கட்டணம் 29ஆயிரத்து 400 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பக்கவாதம் ஏற்படுவோர் நான்கரை மணிநேரத்தில் அரசு மருத்துவமனைக்குச் சென்று அதற்கான ஊசியைச் செலுத்திக் கொண்டால் உடனடியாக குணமடைய முடியும் எனவும், உக்ரைனில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களின் விவரங்களை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என பல்வேறு தகவல்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னைராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதி நவீன நரம்பியல் சிகிச்சைப் பிரிவிற்கான புதிய கட்டடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். மேலும், எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம், எலும்பு புற்றுநோய்ப் பதிப்பிலிருந்து குணமடைந்த 14 வயது சிறுமி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வாழ்த்து பெற்றார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அரசு மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. எனவே மருத்துவர்கள் அறிவுரையின்றி வீடுகளிலேயே மருந்து எடுத்துக்கொள்ளாமல், மருத்துவமனைகளுக்குச் சென்று அறிவியல் பூர்வ சிகிச்சைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அதி நவீன நரம்பியல் துறை கட்டடம் ரூ.60 லட்சம் செலவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இங்கு 6 தீவிர படுக்கைகளும் , 42 சாதாரண படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பக்கவாதம் வந்தவுடன், பாதிக்கப்பட்டவர்கள் நான்கரை மணி நேரத்திற்குள் மாவட்ட அரசு, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை அணுகினால் 1 லட்சம் மதிப்புள்ள ஊசியை இலவசமாகச் செலுத்திக்கொள்வதன் மூலம் உடனடியாக குணமாக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 3ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்கவாதத்திற்குச் சிகிச்சை பெற வந்தாலும் 100 முதல் 150 நபர்களே, பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்தினுள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வோர் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் Internship எனும் உள்ளுறைப் பயிற்சி மேற்கொள்ள 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. வருவாய் குறைவாக இருப்போர் தான் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கின்றனர். ஆனால், பயிற்சிக்கு இந்தளவு கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாகக் கூறினர். எனவே, தற்போது அந்தக் கட்டணம் 29ஆயிரத்து 400 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா தடுப்பூசிகளில் 1 மாதத்திற்குப் பிறகு காலாவதியாகும் நிலையில் உள்ள தடுப்பூசியை மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் வழங்கி, புதிய தடுப்பூசிகளை அரசிடமிருந்து தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெறப்படும் தடுப்பூசிகள் காலக்கெடு முடியும் முன்னர் அரசு தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளப்படும். தமிழ்நாடு அரசு சார்பில் 67 இடங்களில் 24 மணி நேரமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

உக்ரைனில் பயிலும் தமிழ்நாடு மாணவர்களை இந்தியா அழைத்துவர மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் எனும் பெயரை மாற்றித்தர வேண்டும் என அந்த சங்கத்தினர் கோரிக்கை விடுத்ததை ஏற்றுச்சுகாதார ஆய்வாளர் நிலை-1 , சுகாதார ஆய்வாளர் நிலை - 2 எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் போதுமான அளவு ஏற்கெனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள திட்டம்தான் , கடந்த ஆட்சியில் புதிதாகக் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை, அம்மா என்று பெயர்தான் புதிதாக வைத்தனர்.

எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்குச் செயற்கை எலும்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. மூளைச்சாவு அடைந்தவர்களின் பதப்படுத்தப்பட்ட எலும்புகளும் பயன்படுத்தப்படுகின்றன" எனக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக செயற்கையாக வெற்றி பெற்றிருக்கிறது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details