தமிழ்நாடு

tamil nadu

குடிமராமத்து பணி: ஸ்டாலினுக்கு புள்ளி விவரத்துடன் பதிலளித்த அமைச்சர்

By

Published : May 29, 2020, 1:26 PM IST

சென்னை: குடிமராமத்து பணிகளை சரிவர செய்யவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் குற்றஞ்சாட்டிற்கு அமைச்சர் காமராஜ் கன்டணம் தெரிவித்துள்ளார்.

minister kamaraj slams stalin in kudimaramaththu works
minister kamaraj slams stalin in kudimaramaththu works

இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்டுள்ள கன்டண அறிக்கையில், "தமிழ்நாட்டின் அத்தியாயத்தில் புதிய மைல் கல்லாக, டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு செய்து, விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய, தமிழ்நாடு முதலமைச்சர் தற்போது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் பல்வேறு நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

குடிமராமத்துத் திட்டம், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் வழங்கும் திட்டம், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டம் மற்றும் மாநிலத்திலுள்ள பல்வேறு நதிகளின் கட்டமைப்புக்களை சீரமைத்தல் போன்ற பல திட்டங்களை, விவசாய பெருங்குடி மக்களின் தேவைகளை முழுமையாக உணர்ந்து, முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த காவேரி நதிநீர் பிரச்னைக்கு சட்டப்போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டவர் முதலமைச்சர். எந்தப் பிரச்னைகளுக்கும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை தெரிவிக்காமல், அரசின் மீது ஏதாவது குறை கூறிக் கொண்டிருப்பதையே தனது வழக்கமான பணியாக வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது டெல்டா மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் குறித்து அரசின் மீது குறைகளை கூறுவது ஒன்றும் புதிதல்ல.

கடந்த ஆண்டு (2019-2020) டெல்டா மாவட்டங்களில் 60.95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 281 பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்ட காரணத்தினால் மேட்டூர் அணை திறக்கப்பட்டவுடன், அனைத்து கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீர் வழக்கத்தைவிட விரைவாக சென்றடைந்தது. மேலும், பல்வேறு நீர் மேலாண்மைத் திட்டங்களையும் திறம்பட செய்ததன் காரணமாகவே, கடந்த ஆண்டு 7 லட்சம் ஏக்கர் நிலங்களில் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டது.

இதனைப் பாராட்ட மனமில்லாத ஸ்டாலின் தற்போது டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர் வாரப்படுமா என்று கேள்வி எழுப்புவது விந்தையாக உள்ளது.

நீர் மேலாண்மைக்கு மக்கள் பங்களிப்பு அத்தியாவசியமானது என்பதை உணர்ந்த முதலமைச்சர், 2017ஆம் ஆண்டு குடிமராமத்து என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 2016-2017 மற்றும் 2017-2018ஆம் ஆண்டுகளில் 3036 குடிமராமத்து பணிகள் ரூ. 430.56 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது. 2019-2020ஆம் ஆண்டில் ரூ.499.69 கோடி மதிப்பீட்டில், 1829 குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆண்டு ரூ.498.51 கோடி செலவில் 1387 குடிமராமத்துப் பணிகள் எடுக்கப்பட்டு, பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் பொதுப்பணித் துறை மூலமாக மட்டுமே பல்வேறு திட்டங்களில் ஆயிரக்கணக்கான குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, சென்ற வருடம் கிடைக்கப் பெற்ற மழை நீர் கூடுதலாக சேமிக்கப்பட்டு, நீர் ஆதாரம் பெருகியதன் காரணமாகவே, வேளாண்மை தழைத்தோங்கியது, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.

ஏரிகள், கால்வாய்கள் மற்றும் நீர் தேக்கங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள் மற்றும் மட்பாண்டங்கள் செய்பவர்களுக்கு விலை இல்லாமல் வழங்கும் ஒரு சிறப்பான திட்டமும் முதலமைச்சர் அறிவிக்கப்பட்டு இதுவரை 6,68,039 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமென்று அறிவித்ததன் மூலம், லட்சக்கணக்கான டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். எனவே, டெல்டா பகுதிகளிலுள்ள ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களை சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 392 பணிகள் ரூ.67.248 கோடி மதிப்பீட்டில், பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி, போர்க்கால அடிப்படையில் இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் 3457 கி.மீ. வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாரும் பணிகளை மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பதற்கு முன்னரே முடிப்பதற்கு முதலமைச்சர் ஆணையிட்டு அதன் அடிப்படையில் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை கண்காணித்து விரைவுபடுத்தும் பொருட்டு, 7 மூத்த ஐ.ஏ.ஏஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நீர் மேலாண்மை திட்டங்களை அறிமுகப்படுத்தியும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தும், தமிழ்நாட்டின் விவசாய பெருங்குடி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள முதலமைச்சரை பாராட்ட மனம் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர், குறைகூறுவது ஒன்று மட்டும் தான் தனது தலையாய பணி என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details