தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 27, 2023, 10:11 PM IST

ETV Bharat / state

தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் எச்சரிக்கை!

தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை மூலம் செயல்பட்டு வரும் நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்
விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்

சென்னை: தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும், விலையேற்றத்தை கருத்தில் கொண்டு தக்காளியை பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800 டன் வரையில் வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது என்ற அவர் இதனால் வெளிச் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னையில் செயல்பட்டு வரும் 27 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் 10 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள், திருச்சியில் செயல்பட்டு வரும் 13 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 1 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மதுரையில் செயல்பட்டு வரும் 4 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வீதம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் அதே போன்று கொள்முதல் விலைக்கு தக்காளிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 68 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ. 28 முதல் ரூ. 32 வரை குறைவானதாகும். மேலும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.60 முதல் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விலையேற்றம் தற்காலிகமானதே, விரைவில் தக்காளி விலையேற்றம் கட்டுப்படுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி மற்றும் காய்கறிகளை வாங்கிப் பயன்பெறுமாறு அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:"அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறை செல்வார்" - பாஜக எம்.பி.!

ABOUT THE AUTHOR

...view details