சென்னை:இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கின்ற பிக்கல் பிடுங்கலிலிருந்து கொஞ்சம் ஆசுவாசம் செய்து கொண்டு நீர்வளத்துறையில் நடைபெறும் திட்டங்கள் குறித்து குறை சொல்லி பேசி இருக்கிறார். எங்களை குறை சொல்வது ஒருபுறம் இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி காவிரி-குண்டாறு இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி, சரபங்கா திட்டம், அத்திக்கடவு-அவினாசி ஆகிய திட்டங்கள் எல்லாம் அப்படியே ஞாபகம் இருக்கிறதே என்பதில் எனக்கு ஆச்சரியம்.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது திட்டங்களின் பெயர்களை உச்சரித்துவிட்டு சில திட்டங்களை தொட்டுவிட்டுத்தான் சென்றீர்களே தவிர எதையும் முழுமையாக நிறைவேற்றவே இல்லை.
நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 11,400 கோடி வேண்டும் என்று பாரத பிரதமரிடம் கோரிக்கை வைத்தீர்கள். கோரிக்கை வைத்ததோடு சரி. ஒரு ரூபாயும் நீங்கள் அந்த 11,400 கோடியில் வாங்கவில்லை என்பது தங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.
சரபங்கா திட்டத்திற்கு 565 கோடி செலவு செய்தீர்களே தவிர, 10 ஏரிகளுக்காவது தண்ணீர் கொடுத்தது உண்டா? தண்ணீரை ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு அங்குலம் குழாய் (pipe) ஆவது புதைத்ததுண்டா? நீரேற்று நிலையம் (Pumping Station) கட்டி முடிக்காமலேயே போய்விட்டீர்கள். அதுமட்டுமல்ல, முக்கியமானதும் தவிர்க்க முடியாததுமான நில எடுப்பு பணிகளை மறந்தே போனீர்கள். இப்போது நாங்கள் வந்துதான் நீங்கள் மறந்துவிட்டுப் போன பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்.
ஓடையில் தண்ணீர் எடுத்து விடுவது போல எம்.காளிப்பட்டி ஏரிக்கு மட்டும் தண்ணீரை காட்டினீர்களே தவிர அந்த தொகுப்பில் உள்ள மற்ற ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் வந்து அந்த தொகுப்பில் அடங்கியுள்ள 6 ஏரிகளையும் சேர்த்து கூடுதலாக 7 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கி இருக்கிறோம்.
ஆனால், இவ்வளவு வேலை பாக்கி இருந்த போதும் ஒப்பந்ததாரருக்கு மட்டும் கச்சிதமாக Bill Settle ஆனது எப்படி?
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை பொறுத்த வரையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருந்த காரணத்தால் சற்று தாமதம் ஏற்பட்டது.