சென்னை:சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் 4ஆவது மற்றும் நிறைவுக் கூட்டம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டம் சென்னையில் கடந்த 24ஆம் தேதி தொடங்கி இன்றுடன் (ஜூலை 28) நிறைவடைந்தது.
நிலையான மற்றும் நெகிழ்வான நீல, கடல் சார்ந்த பொருளாதாரத்திற்கான சென்னை உயர் நிலைக் கொள்கைகள் என்ற விளைவு ஆவணத்தை இக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த ஆவணம் ஜி 20 டெல்லி தலைவர் பிரகடனம் 2023 உடன் இணைக்கப்படுவதற்காக தலைவர்களின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும். விளைவு ஆவணத்தையும் தலைமையின் சுருக்க உரையையும் அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தில், பிறநாடுகளைச் சேர்ந்த 41 அமைச்சர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை பாதையின் கீழ் முன்னுரிமை பகுதிகளான நிலம் மற்றும் பல்லுயிர் பெருக்கம், நீலப்பொருளாதாரம், நீர்வள மேலாண்மை, சுழற்சிப் பொருளாதாரம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் முக்கிய முடிவுகளை இவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஜி 20 உறுப்பு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 225க்கும் அதிகமான பிரதிநிதிகள், அழைப்பு நாடுகள் மற்றும் யு.என்.இ.பி, யு.என்.எஃப்.சி.சி, சி.ஓ.பி 28 மற்றும் யு.என்.சி.சி.டி உள்ளிட்ட 23 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான முக்கியமான சவால்களைச் சுற்றி விவாதங்கள் நடைபெற்றன.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, “பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை ஒரு முழுமையான வழியில் சமாளிக்க ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற நிலையுடன் ஜி 20 நாடுகள் கைகோர்க்கும்” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
முன்னதாக, குஜராத் காந்திநகர் தகவல் தளத்தின் மூலம் காட்டுத் தீ மற்றும் சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட முன்னுரிமை நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். மேலும், சமீபத்தில் சர்வதேச புலிகள் கூட்டணியின் தொடக்கத்தின் போது காட்டப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான தனிநபர் மற்றும் கூட்டு நடவடிக்கையை ஊக்குவிக்கும் இயக்கமான சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
அமைச்சர்கள் நிலைக் கூட்டத்தின் போது, நீர் மேலாண்மை, சுரங்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறந்த நடைமுறைகளின் தொகுப்புகளை உருவாக்குவதில், 'நிலையான மற்றும் நெகிழ்வான நீலப் பொருளாதாரத்திற்கு மாறுவதை விரைவுபடுத்துதல்’ குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்துதல் மற்றும் எஃகு துறையில் சுழற்சிப் பொருளாதாரம் குறித்த அறிவுப் பரிமாற்றம் விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு, உயிரியல் சுழற்சிப் பொருளாதாரம் போன்ற முக்கியமான தலைப்புகளில் தொழில்நுட்ப ஆவணங்களை உருவாக்குவதில் இந்திய தலைமைத்துவத்தின் முயற்சிகளுக்கு தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஜி 20 உலகளாவிய நில முன்முயற்சியை வலுப்படுத்த, ஜி 20 உறுப்பினர்களால் தன்னார்வத்துடன் தத்தெடுப்பதற்கு 'காந்திநகர் அமலாக்க வரைபடம்' மற்றும் 'காந்திநகர் அமலாக்க கட்டமைப்பு' ஆகியவற்றையும் தலைவர் முன்வைத்தார். அமைச்சர்கள் நிலைக் கூட்டத்திற்கு பின்னர் மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ’’சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையின் முக்கியமான பிரச்னைகளை சரி செய்வதில் அதிக அளவில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு வரலாற்று ரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் பயணம் தலைவரின் தொகுப்புரை மற்றும் விளைவு ஆவணங்களை ஏற்றுக்கொண்டதுடன் முடிவடைந்தது. இந்தியாவின் ஜி 20 தலைமை, விளைவு ஆவணம், நீலப் பொருளாதாரம் என்ற கருப்பொருளின் கீழ் 2 தலைமை ஆவணங்கள், நிலம் மற்றும் பல்லுயிர் பெருக்கம், நீர்வள மேலாண்மை என்ற மையப்பொருளில் சிறந்த நடைமுறைகளின் 4 தலைமை ஆவணங்கள் மற்றும் தொகுப்புகள், ஆதாரவளங்கள் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரம் என்ற மையப்பொருளின் கீழ் 4 தலைமை ஆவணங்களையும் வெளியிட்டது.