தமிழ்நாடு

tamil nadu

‘சீர்காழி கோயில் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது’ - நீதிமன்றம் திட்டவட்டம்!

By

Published : Jul 21, 2023, 10:19 PM IST

சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள ஆடித் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டி தொடரப்பட்ட வழக்கில், திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள ருத்ர மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நடக்க உள்ளதாகவும், இந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கோயில் பரம்பரை அறங்காவலர் தங்கராசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், கோயில் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை உள்ளதாகவும், தாசில்தாரர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்ட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையில் பிரச்னை ஏற்படுவது தொடர்பாக தினந்தோறும் வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன எனத் தெரிவித்தார்.

மனதில் அமைதி வேண்டியும், மகிழ்ச்சிக்காகவும் கோயிலுக்கு வழிபாடு நடத்தச் செல்கின்றனர். ஆனால் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்தார். கோயில் திருவிழாக்கள், யார் பலம் வாய்ந்தவர்கள் என நிரூபிக்கவே நடத்தப்படுவதாகவும், உண்மையான பக்தி எதுவும் இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் பண மோசடி.. காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

இது கோயில் திருவிழாக்களின் நோக்கத்தையே வீழ்த்தி விடுவதாக தெரிவித்த நீதிபதி, இது போல வன்முறைகள் வெடித்தால் கோயில்களின் இருப்பது அர்த்தமற்றதாகி விடுகிறது என்றும் அதற்குப் பதிலாக கோயில்களை மூடிவிடலாம் எனவும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது போன்ற பிரச்னைகளுக்காக காவல் துறையினர், வருவாய் துறையினரின் நேரம் வீணடிக்கப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதி, சீர்காழி ருத்ர மகா காளியம்மன் ஆலயத் திருவிழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் வசம் விட்டு விடுவதாகவும், ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கோயில் திருவிழாவையும் நிறுத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் விவகாரம்; மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details