தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குத்தகை பாக்கி ரூ.31 கோடி செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - மனு தாக்கல்

Ooty Gymkhana Club: அரசு நிலத்திற்கான குத்தகை பாக்கி 31 கோடி ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த ஊட்டி ஜிம்கானா கிளப்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 5:47 PM IST

சென்னை: ஊட்டியில் உள்ள 10.32 ஏக்கர் அரசு நிலம், கடந்த 1922ஆம் ஆண்டு ஜிம்கானா கிளப்பிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு காலக்கட்டங்களில் அந்த குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டதுடன், குத்தகைத் தொகையும் மாற்றி அமைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கிளப் நிர்வாகத்தால் பாக்கி வைக்கப்பட்டிருந்த தொகையைச் செலுத்துமாறு, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முறையாக தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். பின்னர் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு ஒருமுறை குத்தகைத் தொகையானது மாற்றி அமைக்கப்பட்டு, அது தொடர்பாகவும் தாசில்தார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இதற்கு எதிராக கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, கிளப் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசால் நிலம் தங்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு குத்தகைக்கு விடப்பட்டதாகக் கூறினார்.

மேலும், அரசால் குத்தகை விடப்பட்ட நிலையில் பாக்கி தொகையை செலுத்தக்கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்ப முடியாது என்பதால், அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், நிலத்தின் வழிகாட்டு மதிப்பின் அடிப்படையில் அரசு நிர்ணயத்த தொகையை செலுத்தக் கோரியே தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறினார்.

மேலும், அந்த தொகையைச் செலுத்த கிளப் நிர்வாகம் மறுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், குத்தகை பாக்கியை செலுத்தக் கோரி தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு ஜூன் மாதம் வரை பாக்கி வைத்திருக்கக் கூடிய 31 கோடியே 16 லட்சத்து 65 ஆயிரத்து 786 ரூபாயை ஒரு மாதத்தில் செலுத்த கிளப் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

மேலும் கிளப் நிர்வாகம், பாக்கித் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் உடனடியாக கிளப்பை அப்புறப்படுத்தி பாக்கி தொகையை வசூலிக்க வேண்டும் என்றும், அந்த நிலத்தை பொதுமக்களுக்காக பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:‘சனாதனம் குறித்த புரிதல் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை’ - கிருஷ்ணசாமி விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details