தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு கொலை வழக்கு... எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக விலக்கு.. சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:47 PM IST

kodanadu case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை வழக்கு
கோடநாடு கொலை வழக்கு

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை அடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்குத் தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இது போல் பேட்டிகள் அளித்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் என்பவரை நியமித்து உத்தரவிட்டார். மேலும் ஒரு மாதத்திற்குள் சாட்சிகளைப் பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையைத் தள்ளி வைத்தார். இது போலப் பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் கார்த்திகை பாலனை நீதிமன்றம் நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரம்: அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவரங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details