சென்னை:மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இதனிடையே, இந்த வழக்குகளின் இறுதி விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (மார்ச்.3) தொடங்கியது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும்போது, 31 விழுக்காடு பொதுப்பிரிவினருக்குப் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், நீட் தேர்வை நீர்த்துப் போகச்செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதிட்டார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், அரசுப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் யார்? சமுதாயத்தில் எந்தப் பிரிவினர்? என்பதை ஆராய வேண்டும். சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.