சென்னை:கேளம்பாக்கத்தில் உள்ள சுசீல்ஹரி சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாகப் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
மேலும், சிவசங்கர் பாபாவிற்காக மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக, அவரது பக்தை சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் வழக்கில் தேடப்பட்டுவந்த பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன், பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், பக்தைகள் கருணாம்பிகை, திவ்யா, பாரதி ஆகிய ஐந்து பேர் முன் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று(ஜூலை 5) நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை அறிக்கையாக காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி, சிவசங்கர் பாபா மீதான குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு எந்த நேரடித் தொடர்பும் இல்லை எனக்கூறி, ஐந்து பேருக்கும் நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, இரண்டு வாரங்களுக்கு ஐந்துபேரும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், தங்களுடைய பாஸ்போர்டை விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:இ-மெயில் மூலம் மாணவிகளிடம் பேசிய சிவசங்கர் பாபா: இ-மெயிலை முடக்கிய சிபிசிஐடி!