முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி.,யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கினார்.
இது தொடர்பாக குவிட்டன்தாசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஜெகத்ரட்சகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.’
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீ நிஷா ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி சிபிசிஐடி போலீசாரின் சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகினர். கடந்த 12ஆம் தேதி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சென்னை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை ஆராய்ந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சதீஷ் குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது. சிபிசிஐடி போலீசார் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஜெகத்ரட்சகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.