சென்னை:இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இக்கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 18ஆம் தேதி நேர்முக தேர்வு நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் கலந்து கொள்ளலாம் என அழைப்பு விடுத்து, அக்டோபர் 13ஆம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்து திருச்சியைச் சேர்ந்த முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், காலியிடங்களை அறிவிக்காமல், இட ஒதுக்கீடு கொள்கையைப் பின்பற்றாமல் நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் இந்துக்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்பதால் தேர்வு மற்றும் நியமன நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.