தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவசங்கர் பாபா மீது தொடரும் புகார்கள்: பிணை தர நீதிமன்றம் மறுப்பு

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு பிணை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.

By

Published : Dec 17, 2021, 6:30 PM IST

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

சென்னை:செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், டெல்லியிலிருந்த சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி காவல் துறையினர் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

பிணை கோரி அவர் தொடர்ந்த மனுக்கள் ஏற்கனவே செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடிசெய்யப்பட்டன. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

மாணவிகளைத் தூண்டிவிட்டு பொய் புகார்கள்

இந்த நிலையில் பிணை கோரி சிவசங்கர் பாபா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் இன்று (டிசம்பர் 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிவசங்கர் பாபாவுக்குச் சொந்தமான கேளம்பாக்க நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவிகளைத் தூண்டிவிட்டு இந்தப் பொய் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நிரந்தரமாக நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் பதியப்படுவதாகவும், சிவசங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் ஒரு மாணவி புகார்

காவல் துறை தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், சிவசங்கர் பாபாவுக்கு எதிராகத் தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருப்பதாகவும், நேற்றுகூட (டிசம்பர் 16) ஒரு புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சிவசங்கர் பாபா மாணவிகளுடன் இருந்த புகைப்படங்களையும், அவர் மாணவிகளுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளையும் தாக்கல்செய்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்பதால் பிணை வழங்கக் கூடாது என்றார்.

சாமியார் எனக் கூறிக்கொள்ளும் மனுதாரர்

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சிவசங்கர் பாபா தரப்பு வழக்கறிஞர், இந்தப் புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டவை என்றும், மனுதாரருக்கு 73 வயதாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்செல்வி, சாமியார் எனக் கூறிக்கொள்ளும் மனுதாரருக்கு எதிரான புகார்களின் தன்மை, குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டும், மனுதாரருக்குப் பிணை வழங்கினால் அவர் தலைமறைவாக வாய்ப்பு உள்ளது என்பதாலும், பிணை வழங்க முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே! - ஜெயக்குமாரின் கலகல கண்டன உரை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details