சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (19.9.2023) தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
அதில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நாம் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்கள் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், இந்த ஆண்டும் நாம் சிறப்பாகத் திட்டமிட்டு, எதிர்வரும் பருவமழைக் காலத்தை முறையாகக் கையாள வேண்டும்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஒரு முழுமையான அணுகுமுறையின் மூலம் பேரிடர்கள், அபாயம் மற்றும் பாதிப்புகள் குறித்த தரவுகள் மற்றும் வரைபடங்களைத் தயாரிப்பதோடு, பேரிடர் அபாயத்தைக் குறைத்திடத் தணிப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களின் அபாயத்தை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்த, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நமது அரசானது, அனைத்து விதமான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொண்டு, அதன் மூலம் பேரிடர்களை எதிர்கொள்ளக்கூடிய திறன்மிக்க சமூகத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இதன்படி, பேரிடர் மேலாண்மையின் அனைத்து அம்சங்களான நிறுவன மற்றும் நிதி ஏற்பாடுகள், பேரிடர் தவிர்ப்பு, தணிப்பு, ஆயத்தம், மீட்பு, நிவாரணம், சீரமைப்பு, மறுவாழ்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கி, தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை கொள்கையை நமது அரசு மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. நமது பேரிடர் மேலாண்மை இயக்கத்தில் முக்கியமான மூன்று கொள்கைகளைப் பின்பற்றி வருகிறோம்.
(1) அனைத்து வகை பேரிடர்களின் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்தல்.
(2) உயிரிழப்பு, பொதுச் சொத்துகள் மற்றும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளின் சேதம் ஆகிவற்றைத் தவிர்த்தல்.
(3) அரசு உருவாக்கிய பொருளாதார மற்றும் வளர்ச்சி ஆதாயங்களை இழக்காமல் இருத்தல்.
அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழ்நாட்டிற்கு 443.0 மி.மீட்டர் மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இது தமிழ்நாட்டின் வருடாந்திர இயல்பான மழை அளவில், 48 விழுக்காடாக உள்ளது.
மேலும் தமிழகம், வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிடைக்கப் பெறும் மழைப்பொழிவை அதிகமாக சார்ந்துள்ளதால், பருவமழையின் பலன்களை அதிகமாக பெற, அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் சேதம் ஆகியவற்றைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது.
ஏற்கனவே கடந்த 14-9-2023 அன்று, தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்துத் துறை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சேதத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுகளில், வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட புயல், கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிந்து, பேரிடர்களின் சேதத்தை குறைப்பதற்கும், பாதிப்புகளை தவிர்ப்பதற்கும், பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறை ஆகிய துறைகளுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து 716 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் விளைவாக 4,399ஆக இருந்த பேரிடர் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகள் 3,770ஆக குறைந்துள்ளன. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.
மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையங்களை, முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம். பேரிடர் குறித்த எச்சரிக்கை தகவல்கள் கடலோர பகுதிகளில் 424 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை கருவிகள், TNSMART செயலி, பொதுவான எச்சரிக்கை நடைமுறை, அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு உரிய காலத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாகும் பொதுமக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், நிவாரண மையங்களும் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நிவாரண முகாம்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்திட வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பேரிடர் காலங்களில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாருவதோடு, கரைகளையும் வலுப்படுத்த வேண்டும். அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்போது பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை வழங்கப்பட வேண்டும். மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம்.