தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 6:00 PM IST

ETV Bharat / state

தொடரும் நீட் தேர்வு குழப்பங்கள்: கோவையில் 2 பேரை மருத்துவ மாணவராகப் பதிய தடை!

சென்னை: மருத்துவப் படிப்பில் சேர்ந்து புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாக கூறப்படும் பி.எஸ்.ஜி. கல்லூரியை சேர்ந்த 2 மாணவர்களின் உண்மைத் தன்மை தெரியும் வரையில் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்ய முடியாது என தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நீட்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய உதித்சூர்யா என்ற மாணவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வழக்கு பதியப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இது பல்வேறு தரப்பினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, யனானி, ஆயுர்வேதா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வின் மூலம் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப்பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷையன் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பினார்.

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கடிதம்

அதனடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2019-20ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது.

அதில், கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் மேற்கொண்ட ஆய்வில் 2 மாணவர்களின் புகைப்படம் வேறுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரி முதல்வர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கடிதம்

அந்தக் கடிதத்தினை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் சுதா சேஷையன், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழுவின் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர், தேசிய தேர்வு முகமை (நீட் இளநிலை), தேசிய மருத்துவ சேவை இயக்கம் ஆகியவற்றிக்கு எழுதியுள்ள கடிதத்தில், கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி.மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் 2 பேரின் புகைப்படம் நீட் தேர்வு ஹால்டிக்கெட்டிற்கும், மாணவர் சேர்க்கை குழுவின் அனுமதி கடிதத்திற்கும் வேறுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே மாணவர்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க வேண்டும். மேலும், மாணவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை உறுதியாகும் வரையில் அவர்களை மருத்துவ மாணவர்களாக பல்கலைக் கழகத்தில் சேர்க்க முடியாது என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details