தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 5, 2023, 2:56 PM IST

ETV Bharat / state

"குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே கை அகற்றப்பட்டது" - விசாரணைக் குழு அறிக்கையில் பரபரப்பு தகவல்!

சென்னையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குழந்தைக்கு ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டதாகவும், குழந்தையின் உயிரைக் காப்பாற்றவே கை அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical
குழந்தை

சென்னை:ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை, மூளையில் நீர்க்கசிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தைக்கு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையின் கை கறுப்பாக மாறியது. பின்னர் குழந்தையின் கை செயலிழந்துவிட்டதாகக் கூறி, மருத்துவர்கள் கையை அகற்றினர்.

ஆனால், மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தையின் கை அழுகியதாக அக்குழந்தையின் தாயார் அஜிஸா குற்றம்சாட்டினார். குழந்தையின் கை ரத்த சிவப்பாக மாறியதைக் கண்டதும் தான் செவிலியரிடம் தெரிவித்ததாகவும், அவர் அதைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து மருத்துவர்களிடம் கூறியபோதும், மூன்று நாட்களுக்குப் பிறகுதான் மருத்துவர்கள், அதனைப் பார்த்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என்றும் குழந்தையின் தாயார் குற்றம் சாட்டினார். தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால், குழந்தையின் கையைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். குழந்தையின் தாய் அஜிஸாவின் குற்றச்சாட்டை மருத்துவர்கள் மறுத்தனர்.

மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், குழந்தையின் கையில் ரத்தம் செல்லாமல் இருப்பதைக் கண்டறிந்த பிறகே மேல் சிகிச்சைக்கு அனுப்பியதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ரத்தநாளப் பிரிவு துறைத் தலைவர் ஸ்ரீதரன், பொது அறுவை சிகிச்சைத் துறை தலைவர் சாந்தி, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் குழந்தைகள் ரத்தவியல் துறையின் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் குழந்தையின் பெற்றோர்களிடம், குறிப்பிட்ட மூன்று நாட்களில் நடந்தவை குறித்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையின் விசாரணைக்குழு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. venfion ஊசி தமனியில் போடவில்லை என்பது பெற்றோர்களின் வாக்கு மூலம் மற்றும் மருத்துவர்களின் வாக்கு மூலம் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்து கசிவினால் ரத்த ஓட்டப் பாதிப்பு ஏற்படவில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

குழந்தையின் வலது கையில் வலி மற்றும் நிறமாற்றம் ஏற்பட்டபின் செவிலியர் மற்றும் மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதனை செய்து உள்ளனர். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர் ரத்த நாள அடைப்பு (Thrombophlebitis) ஏற்பட்டுள்ளது என்று கணித்து சிகிச்சை அளித்துள்ளார்.

ரத்த நாள அடைப்பு, செலுத்தப்பட்ட மருந்தினாலோ மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. சூடோமோனாஸ் (pseudomonas) கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தை பாதித்ததால் குழந்தைக்கு வலது கையில் ரத்த ஓட்டம் பாதிப்பு (Arterial Thurtibasis) ஏற்பட்டுள்ளது. குழந்தையின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் வலது கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: தாய் கண்ணீர் மல்க பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details