தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை முதலமைச்சரை சந்தித்த சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜி ராமகிருஷ்ணன்

சென்னை தீவுத்திடல் எதிரில் கூடியிருந்தவர்களை மூன்று கிலோ மீட்டருக்குள் குடியமர்த்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து மனு அளித்தார்.

Marxist Communist Party leaders meet with Deputy Chief Minister OPS
துணை முதலமைச்சரை சந்தித்த சிபிஎம் ஜி.ராமகிருஷ்ணன்

By

Published : Jan 2, 2021, 7:09 AM IST

சென்னை: சென்னை மாநகராட்சி 55ஆவது வட்டம் தீவுத்திடல் எதிரில் கூவம் கரையோரம் குடியிருந்த மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வகைப்படுத்தி சென்னைக்கு அப்பால் 40 கிலோமீட்டர் தள்ளி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தி வருகிறது.

இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. கரையோரம் குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போது அவர்கள் வாழ்ந்த இடத்திலோ, அல்லது மூன்று கிலோமீட்டருக்கு அருகாமையிலோ குடியமர்த்த வேண்டுமென தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது.

சத்தியவாணி முத்து நகர், காந்தி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் குடியிருந்த மக்களை கடந்தாண்டு வலுக்கட்டாயமாக காவல்துறையின் உதவியோடு அரசு அப்புறப்படுத்தும் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியது. அந்தப்போராட்டத்தின்போது, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 29 தேதி காவல்துறையினரால் சிபிஎம் கட்சியின் கிளைச் செயலாளர் ஆசைத்தம்பி கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.

மேலும் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரடியாக அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து 2020 நவம்பர் 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்களுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்க கோரி மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன.

இத்தகையச் சூழலில் வலுக்கட்டாயமாக அப்பகுதி மக்களை சென்னைக்கு வெளியே குடியமர்த்தி அம்மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கு பாதகம் விளைவிக்காமல், புளியந்தோப்பு கேபி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள 1,056 குடியிருப்புகளில் குடியமர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் மாநில துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விளக்கங்கள், உரிய ஆவணங்கள் ஆதாரங்களுடன் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக துணை முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க:தீவுத்திடல் அருகே பூர்வக்குடி மக்களை வெளியேற்றும் முயற்சியைக் கைவிடுக- சீமான்

ABOUT THE AUTHOR

...view details