நடிகர் விவேக், கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விவேக் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசியபோது, கரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருகின்றன. யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை என்றார். மேலும் கரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள், அரசின் மக்கள் நல பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன் பிணை கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்
அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்துகொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டுமென்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும் தெரிவித்தார். எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக்கூடாது என்றுதான் கூறியதாகவும் தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.
மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன் பிணை மனு ஏற்கனவே சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன் பிணை கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன் பிணை வழங்கக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு - நடிகர் மன்சூர் அலிகான் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
சென்னை : கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன் பிணை வழங்கக்கோரியும் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
Mansoor ali khan move bail petition before MHC