தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மீண்டும் பறக்கும் மாஞ்சா நூல் பட்டம்… 15 நாட்களில் 3 பேர் காயம்! - சென்னை மாவட்ட செய்தி

சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் கடந்த 15 நாட்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 25, 2023, 3:31 PM IST

சென்னை: மாஞ்சா நூல் பட்டத்தால் அதிகப்படியான உயிரிழப்புகள் மற்றும் பலர் காயமடையும் நிலை ஏற்பட்டது. இதனால் கடந்த 2007ஆம் ஆண்டு, சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தவும், விற்கவும் தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவிட்டது.

இதனை மீறி மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்படுத்துவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையினால் சென்னையில் மாஞ்சா நூல் மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் சென்னையில் மாஞ்சா நூலில் பட்டம் விடும் கலாசாரம் தலை தூக்கி உள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் மூன்று வெவ்வேறு இடங்களில், மாஞ்சா நூல், இரண்டு வாகன ஓட்டிகளின் கழுத்தை பதம் பார்த்துள்ளதால் அவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 12ஆம் தேதி தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த அந்த இளைஞர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டார். அதில் சற்று வேகமாக வந்திருந்தால் உயிர் பிழைத்திருக்க முடியாது என நெஞ்சை பதறவைக்கும் வகையில் வீடியோவில் அந்த இளைஞர் குறிப்பிட்டார். இந்த வீடியோ தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மதுரவாயல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட துரைமாணிக்கம்(45), பாலாஜி, கணேசன், வேல், ஹரிகிருஷ்ணன், முரளி ஆகிய 6 நபர்களைக் கைது செய்தனர்.

இந்நிலையில் இதே போல ஒரு சம்பவம் தேனாம்பேட்டையில் நடந்துள்ளது. கே.கே. நகர் செக்டார் பகுதியை சேர்ந்தவர் நிக்கி செரியன் (35) என்பவர், நேற்று செரியன் பணி முடிந்து தனது பெண் தோழியுடன் பைக்கில் அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அண்ணாசாலை விஜயராகவா சாலையில் திரும்பும்போது மாஞ்சா நூல் செரியனின் கழுத்தை அறுத்தது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவரது பெண் தோழிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அறுபட்டு காயமடைந்த செரியனை அவரது பெண் தோழி மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். செரியனை பரிசோதித்த மருத்துவர்கள் 4 செ.மீ. அளவுக்கு கழுத்து அறுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் கடந்த 12ஆம் தேதி தரமணியை சேர்ந்த குணசீலன்(30) என்ற தனியார் நிறுவன ஊழியர் சென்னை மவுண்ட் வழியாக சென்ற போது மாஞ்சா நூலினால் கழுத்து மற்றும் கை பகுதியில் காயம் ஏற்பட்டது. மேலும் தொடர்ச்சியாக இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் போலீசார் மாஞ்சா நூலில் பட்டம் விடுவோர் மற்றும் விற்பனை செய்பவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் மாஞ்சா நூலில் பட்டம் விடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதா என்ற கோணங்களிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் கருவறை தெய்வங்களை வீட்டின் கருவறைக்கு கொண்டு வந்த கொண்டைய ராஜூ.. சென்னையில் 'சித்ராலயம்' ஓவியக் கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details