தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 18, 2020, 1:57 AM IST

ETV Bharat / state

21 குண்டுகள் முழங்க கரோனாவால் மரணித்த இன்ஸ்பெக்டர் பாலமுரளி உடல் நல்லடக்கம்!

சென்னை: கரோனாவால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பாலமுரளியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

mambalam inspector balamurali covid-19
mambalam inspector balamurali covid-19

கரோனா தொற்றால் சாதாரண பொதுமக்கள் மட்டுமில்லாமல், அதனைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, சென்னையில் மட்டும் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் சென்னை காவல் துறையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது காவல் துறை தரப்பில் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளராகப் பணியாற்றிவந்தவர் பாலமுரளி (47). கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இவர் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார். இச்சூழலில் இவர் கடந்த ஜூன் 5ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளானார்.

காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றதால் ஜூன் 7ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார். அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாத நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். சென்னை காவல் துறையில் கரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

பாலமுரளியின் மறைவுக்கு முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சென்னை மாநகரக் காவல் ஆணையர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரின் உடல் அடக்கம் செய்யப்படுவதற்காக தியாகராயர் நகரிலுள்ள கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அதற்கு முன்னதாக, மயானத்திற்கு வெளியே காவல் துறையினர், அவரது குடும்பத்தினர் ஆகியோர் சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் உருவப் படத்திற்கு மலர் தூவினர். அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க பாலமுரளியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியாக காவல் ஆய்வாளரின் உடல் தகுந்த பாதுகாப்பு நடைமுறையோடு அடக்கம் செய்யப்பட்டது.

21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்

காவல் ஆய்வாளர் பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மதுரை வந்தடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல்; உடலுக்கு ஆட்சியர் தலைமையில் அஞ்சலி!

ABOUT THE AUTHOR

...view details