தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2020, 7:00 PM IST

Updated : Nov 3, 2020, 7:25 PM IST

ETV Bharat / state

விமான டிக்கெட் மோசடி வழக்கு: முன்னாள் துணை வேந்தருக்கு 2 ஆண்டு சிறை

சென்னை: விமான டிக்கெட் மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விமான டிக்கெட் மோசடி வழக்கு: முன்னாள் துணை வேந்தருக்கு 2 ஆண்டு சிறை
விமான டிக்கெட் மோசடி வழக்கு: முன்னாள் துணை வேந்தருக்கு 2 ஆண்டு சிறை

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் 2006-2009ஆம் ஆண்டு வரை துணைவேந்தராக பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசைன். இவர், துணைவேந்தராக பணியில் இருந்தபோது 2008ஆம் ஆண்டு மே மாதம் வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றார்.

இதற்காக உயர்வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமான கட்டணமாக 2 லட்சத்து 99 ஆயிரத்து 673 ரூபாய் செலுத்தப்பட்டது. இதன்பின்பு, இந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டு சாதாரண இருக்கைக்கு முன்பதிவு செய்யப்பட்டது. மீர் முஸ்தபா உசைன் சாதாரண இருக்கைக்கான டிக்கெட்டில் பயணம் செய்து விட்டு உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாகக் கூறி, 2 லட்சத்து 22 ஆயிரத்து 332 ரூபாய் பணத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து கூடுதலாக பெற்றார்.

இதேபோன்று பிரிட்டிஷ், நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்று வந்த வகையில், டிக்கெட் கட்டணமாக 7 லட்சத்து 82 ஆயிரத்து 124 ரூபாய் மோசடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் பெற்றார்.

இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி மீர் முஸ்தபா உசைன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, ஊழல் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Last Updated : Nov 3, 2020, 7:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details