சென்னை:செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்துள்ள 403 ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 403 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நோட்டீஸை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.